“ இந்தியாவில் கிடைக்கும் கச்சா எண்ணெய் 2041 ஆம் ஆண்டுடனும், எரிவாயு 2043 ஆம் ஆண்டோடும் தீர்ந்துவிடும்”

Views : 12

பதிவு செய்த நாள் 14-Feb-2026

“ இந்தியாவில் கிடைக்கும் கச்சா எண்ணெய் 2041 ஆம் ஆண்டுடனும், எரிவாயு 2043 ஆம் ஆண்டோடும் தீர்ந்துவிடும்” 


நாடாளுமன்றத்தில் ரவிக்குமார் எழுப்பிய வினாவுக்கு பெட் ரோலியத்துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி தகவல் 


பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சரிடம் இன்று பின்வரும் வினாக்களை ரவிக்குமார் எழுப்பினார் :


* நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற எரிபொருள் வளங்கள் எத்தனை ஆண்டுகளில் தீர்ந்துவிடும் என மதிப்பிடுவதற்காக அரசு ஏதேனும் ஆய்வு அல்லது மதிப்பீடு மேற்கொண்டுள்ளதா? அவ்வாறு மேற்கொண்டிருந்தால், அந்த ஆய்வின் விவரங்களையும் எரிபொருள் வாரியாக கிடைத்த முடிவுகளையும் தெரிவிக்கவும்;


* இவ்வாறு எரிபொருள் வளங்கள் குறைந்து வருவதால் பொருளாதாரத்துக்கும் ஆற்றல் பாதுகாப்புக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசு அறிந்துள்ளதா? அவ்வாறு இருந்தால் அதன் விவரங்களை தெரிவிக்கவும்;


* எரிபொருள் வளங்கள் தீர்ந்து வருவதை நிர்வகிக்க அல்லது அதன் பாதிப்புகளை குறைக்க மாற்று உத்திகள் அல்லது கொள்கைகளை அரசு உருவாக்கியுள்ளதா அல்லது உருவாக்கத் திட்டமிட்டுள்ளதா? அவ்வாறு இருந்தால் அதன் விவரங்களை தெரிவிக்கவும்?


அதற்கு அமைச்சர் சுரேஷ் கோபி அளித்த பதில்:


வினாக்கள் (a) முதல் (c) வரை:

ஹைட்ரோகார்பன் துறையின் பொதுநிர்வாகம் (Directorate General of Hydrocarbons) தெரிவித்துள்ளதாவது, நாட்டின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்பு நிலை உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையான PRMS (Petroleum Reserve Management System) முறையின் அடிப்படையில் ஆண்டுதோறும் கணக்கிடப்படுகிறது.


2025 ஏப்ரல் 1 ஆம் தேதியிலான PRMS நிலவரத்தின் படி, நாட்டின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக்கான இருப்பு–உற்பத்தி விகிதம் (Reserve/Production Ratio – R/P Ratio) முறையே சுமார் 15 ஆண்டுகள் மற்றும் 17 ஆண்டுகள் ஆகும்.


R/P விகிதம் என்பது தற்போதைய பயன்பாட்டு வேகம் மாறாமல் இருந்தால், தற்போது உள்ள இருப்புகள் எத்தனை ஆண்டுகள் போதுமானதாக இருக்கும் என்பதைக் கணிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு முறை ஆகும்.


எண்ணெய் மற்றும் எரிவாயு தேடல் என்பது தொடர்ச்சியான, இயக்கமுள்ள செயல்முறை என்பதால், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் இருப்பு அதிகரிப்புகள் மூலமாக கூடுதல் வளங்கள் சேர்க்கப்பட்டு வருவதால் R/P மதிப்புகள் மாறக்கூடும்.

எனவே, மேற்கண்ட R/P மதிப்புகள் சுட்டிக்காட்டும் அளவிலேயே (indicative) கருதப்பட வேண்டும்.


பெட்ரோல் போன்ற உயிர் எரிபொருட்கள் படிப்படியாக குறைக்கப்படும் நிலையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் அதிக ஆரம்ப முதலீடு தேவைப்படுதல், சூரிய, காற்று மற்றும் உயிர் ஆற்றல் போன்ற உள்நாட்டு புதுப்பிக்கத்தக்க வளங்களுக்கு மாறுதல் போன்றவை பொருளாதாரத்துக்கும் ஆற்றல் பாதுகாப்புக்கும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதைக் அரசு உணர்ந்துள்ளது. 


ஆற்றல் கலவையில் இயற்கை எரிவாயு, உயிரி எரிபொருட்கள், பசுமை ஹைட்ரஜன் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கை அதிகரிக்க அரசு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் கீழ், முதன்மை ஆற்றல் கலவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை உயர்த்துதல்; பெட்ரோலில் எத்தனால் கலவையை அதிகரித்தல்; டீசலில் பயோடீசலைக் கலத்தல்; SATAT (Sustainable Alternative Towards Affordable Transportation) திட்டத்தின் கீழ் சுருக்கப்பட்ட உயிரி எரிவாயு நிலையங்கள் அமைத்தல்; ஆண்டுக்கு குறைந்தது 5 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் திறனை உருவாக்குதல்; மற்றும் மாற்று எரிபொருள் நிலையங்கள் (மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்) நிறுவுதல் ஆகியவை இடம்பெறுகின்றன.


இவை நாட்டின் தன்னிறைவை அதிகரித்து, உலக சந்தை விலை ஏற்றத் தாழ்வுகள் மற்றும் விநியோகத் தடைகள் காரணமாக ஏற்படும் அபாயங்களை குறைக்கும்.” 


இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.